WhatsApp Button

விவசாயிகளுக்கான தனித்துவ அடையாள எண் பெற 'அக்ரி ஸ்டேக்' ல் பதிவு செய்துவிட்டீர்களா..?

மத்திய, மாநில அரசுகள் சார்பில் விவசாயிகள் தொடர்பான அனைத்து தரவுகளையும் ஒருங்கிணைப்பதற்கான 'அக்ரி ஸ்டேக்' பதிவு செய்யும் பணிகள் தமிழ்நாட்டில் தொடங்கியுள்ளது.



இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகள் பற்றிய தகவல்களையும் சேகரித்து டிஜிட்டல் மயமாக்கும், 'அக்ரி ஸ்டேக்' திட்டத்தின்படி ஆதார் எண் போல், ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு தனி குறியீட்டு எண் வழங்கப்படும். இதன் மூலம், விவசாயிக்கு சொந்தமான நிலம், அவர் பயன்படுத்திய அரசு திட்டங்கள் உள்ளிட்ட விபரங்கள், ஒரே இடத்தில் சேமிக்கப்படும். அதற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. வேளாண்மை, தோட்டக்கலை, மக்கள் நலப் பணியாளர்கள் மூலம் இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அந்தந்த ஊராட்சி அலுவலகங்களில் வைத்து இந்த விவரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. விவசாயிகள் தொடர்பான விவரங்களை பதிவேற்றம் செய்யும் பணி அனைத்து நாள்களிலும் நடைபெறுகிறது. 

அனைத்து ஊராட்சி அலுவலகம், இ சேவை மையங்களில் விவசாயிகளின் தகவல் பதிவேற்றும் பணியானது வேளாண் துறையால் மேற்கொள்ளப்பட உள்ளது. விவசாயிகள் தங்கள் ஆதார் எண், சுய விவரங்கள், பட்டா, சிட்டா, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்பேசி எண், ரேஷன் கார்டு போன்ற தகவல்களை கொடுத்து பதிவு செய்யலாம்.

பதிவு செய்ததும், பதிவு செய்ததற்கான உறுதிபடுத்தப்பட்ட எண்ணுடன் ஒரு மெசேஜ் உங்கள் செல்பேசிக்கு வரும். அந்த எண்ணைக் கொண்டு, ஆன்லைனில் பதிவு செய்ததன் நிலை குறித்து அறிந்துகொள்ளலாம்.

ஆன்லைன் முகவரி: https://tnfr.agristack.gov.in/farmer-registry-tn/

இனி விவசாயம் சார்ந்த மானியத் திட்டங்கள், சேவைகளை, இந்த தனித்துவமான அடையாள எண் மூலமாக மட்டுமே பெற முடியும். எனவே, விவசாயம் சார்ந்த திட்டங்கள் மற்றும் சேவைகளை தடையின்றி பெற இப்போதே பதிவு செய்யுங்கள்!

புதியது பழையவை