தமிழ்நாட்டில் மக்காச்சோள வர்த்தகம் மேற்கொள்வதற்கு தற்போது விதிக்கப்படும் ஒரு சதவீத சந்தைக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்களிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மக்காச்சோளப் பயிர் சராசரியாக 4 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டு, 29 லட்சம் மெட்ரிக் டன் மக்காச்சோளம் உற்பத்தி செய்யப்படுகிறது. மக்காச்சோளம் பெரும்பாலும் தீவன தயாரிப்புக்காக கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது எத்தனால் உற்பத்தி தொழிற்சாலைகளில் மூலப்பொருளாக அதன் தேவை பெரிதும் அதிகரித்துள்ளது. இதனால் தமிழ்நாடு அரசால் மக்காச்சோள சாகுபடி பெருமளவில் விவசாயிகளிடையே ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.1987-ம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருள் சந்தை (முறைப்படுத்துதல்) சட்டத்தின்படி, வேளாண் விளைபொருளான மக்காச்சோளத்திற்கு கோவை, ஈரோடு, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை மற்றும் திருப்பூர் ஆகிய 7 விற்பனைக் குழுக்களின் அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிகளில், ஒரு சதவீத சந்தை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையே மக்காச்சோளத்தின் தேவையின் அடிப்படையில் தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் மக்காச்சோள சாகுபடி மேற்கொள்ளப்பட்டு பரப்பு அதிகரித்து உற்பத்தி உயர்ந்தது.
சந்தை கட்டணம் ரத்து
அதையொட்டி மக்காச்சோள விற்பனையை முறைப்படுத்துவதற்காக பெரம்பலூர், திருச்சி, சேலம், மதுரை, நெல்லை, கடலூர், தேனி, திண்டுக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விருதுநகர், நாமக்கல், காஞ்சீபுரம், வேலூர் மற்றும் அரியலூர் ஆகிய 16 விற்பனை குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ள 161 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கும், தமிழ்நாடு வேளாண் விளைபொருள் சந்தை (முறைப்படுத்துதல்) சட்டப் பிரிவின்படி மக்காச்சோளம் அறிவிக்கை செய்யப்பட்டு, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது. அறிவிக்கை செய்யப்பட்ட அந்தப் பகுதிகளிலும் மக்காச்சோள வர்த்தகத்திற்கு ஒரு சதவீத சந்தை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற கருத்துகள் ஆராயப்பட்டன. அதன்படி, தமிழ்நாடு வேளாண் விளைபொருள் சந்தை (முறைப்படுத்துதல்) சட்டப் பிரிவில் வெளியிடப்பட்ட வேளாண் விளைபொருளான மக்காச்சோளத்திற்கான அறிவிக்கை, தமிழ்நாட்டின் அனைத்து விற்பனைக்குழு பகுதிகளிலும் ரத்து செய்யப்படுகிறது. இதற்கான அரசிதழ் விரைவில் வெளியிடப்படும்.
இந்த அறிவிப்பை வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் செயலாளர் வெளியிட்டுள்ளார்.
நன்றி: தினத்தந்தி - 07-03-2025