WhatsApp Button

பசுந்தாள் உரத்தின் பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோமா?

 பசுந்தாள் உரத்தின் பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோமா?

பசுந்தாள் உரம் பயிர்கள் காற்றிலுள்ள தழைச்சத்தை 70 சதவீதம் வரை வேர் முடிச்சுகளில் நிலைநிறுத்தி அதில் ஒரு பகுதியை நிலத்தில் சேர்க்கிறது. இதனால் நிலம் வளமடைகிறது.



பசுந்தாள் உரம் ஒரு ஏக்கருக்கு 25 கிலோ முதல் 45 கிலோ வரை தழைச்சத்தை மண்ணிற்கு அளிக்கிறது.
பசுந்தாள் உரப்பயிர் நிலத்தின் அமைப்பை சீராக்குகிறது. மண் அரிப்பை தடுப்பதுடன் வளமான மேல் மண்ணை பாதுகாக்கிறது.
மண்ணின் கரிமப்பொருளை அதிகப்படுத்துவதோடு மண்ணின் நீர்பிடிப்பு தன்மையை அதிகரிக்க செய்கிறது.
மண்ணின் கீழ் பகுதியிலுள்ள சத்துக்களை மேல்மட்டத்திற்கு கொண்டு வந்து பயிருக்கு சத்து கிடைக்க வழிவகை செய்கிறது.
பார் நிலத்தை சீர்செய்கிறது.
பசுந்தாள் உரப்பயிர்களை நிலத்தில் இடுவதால் விளை பொருட்களின் தரம் அதிகரிக்கிறது.
மண்ணின் வளத்தைப் பாதுகாக்க, அதிக கரிம அளவை மண்ணில் நிலை நிறுத்துதல் மிக அவசியம்.
பசுந்தாள் உரப் பயிர்கள் வளிமண்டலத்தில் உள்ள தழைச்சத்தை கிரகித்து, வேர்ப் பகுதியில் சிறுமுடிச்சுகள் மூலம் நிலைநிறுத்தி, அந்தப் பயிரின் தழைசத்து, உரத்தேவையினை தானே பார்த்துக் கொள்கிறது. இதனால், செடியின் வளர்ச்சி அதிக பசுமையாக இருக்கிறது. மேலும், மண் வளமும் பெருகிறது.
பசுந்தாள் பயிர்களை அப்படியே மடக்கி, நிலத்தின் உழும் முறையை தொன்றுதொட்டு நாம் தெரிந்த முறையாகும்.
பசுந்தாள் உரப் பயிர்களான சணப்பு, தக்கைப் பூண்டு, மணிலா அகத்தி, கொழுஞ்சி மற்றும் சித்தகத்தியில் தழை, மணி, சாம்பல் சத்துடன் நூண்ணூட்ட சத்துக்களும் உள்ளன. பசுந்தாள்களை மண்ணில் இட்ட பின் பயிரிடப்படும் பயிர்களின் விளைச்சல் வெகுவாக அதிகரிக்கின்றது.
அடுத்து விளைவிக்கும் பயிர்களுக்கான ரசாயன உரத் தேவையும் குறைகிறது. பசுந்தாள் பயிர்களை நிலங்களில் விதைத்த 30-45 நாள்களுக்குள் நிலத்தில் மடக்கி உழுதுவிடவேண்டும். அதாவது, பசுந்தாள் பயிர்களின் பூக்கும் பருவத்துக்கு முன்பாக இதனை மடக்கி உழ வேண்டும்.
நெல் வயலில் நாற்று நடுவதற்கு 20-25 நாள்களுக்கு முன்னரும், மற்ற நிலங்களில் விதைப்பதற்கு 30-35 நாள்களுக்கு முன்னரும் பசுந்தாள்களை மண்ணில் இட்டு உழுதுவிடவேண்டும். அவ்வாறு உழும் போது, தழைச்சத்தை வெகுமளவில் கொடுக்கின்றது. அவை மட்கும்போது உற்பத்தியாகும் கரிம அமிலங்களின் வினையால், மண்ணில் பயிருக்குக் கிடைக்கும் துத்தநாகச் சத்து அதிகரித்துக் காணப்படுகிறது.
பசுந்தாள் உரப் பயிர்களான சணப்பில் கோ-1, கொழிஞ்சியில் எம்டியு-1, மணிலா அகத்தியில் கோ-1 ஆகிய ரகங்கள், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது.
பசுந்தாள் உற்பத்திக்கு ஏக்கருக்கு சணப்பு என்றால் 10 கிலோ, தக்கைப் பூண்டு என்றால் 20 கிலோ, மணிலா அகத்தி என்றால் 15 கிலோ அல்லது கொழிஞ்சிக்கு 8 கிலோ போதுமானது.
சணப்பின் மூலம் ஏக்கருக்கு சுமார் 7 டன் உயிர் பொருள்களும் 35 கிலோ தழைச்சத்தும்,
தக்கைப் பூண்டில் 10 டன் உயிர் பொருள்களும் 60 கிலோ தழைச்சத்தும்,
மணிலா அகத்தியில் 10 டன் உயிர் பொருள்களும் 50 கிலோ தழைச்சத்தும்
கொழுஞ்சியில் 3 டன் உயிர் பொருள்களும் 25 கிலோ தழைச்சத்தும் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
பசுந்தாள் உரமிடுவதால் அங்ககப் பொருள்கள் மண்ணில் சேர்கின்றன. இதனால், மண்ணின் வளம் மேம்படுகிறது. நிலத்தில் நீர் தேக்கும் தன்மை அதிகரிக்கின்றது. அடுத்ததாகப் பயிரிடப்படும் பயிர்களின் நுண்ணூட்டத் தேவை நிவர்த்தி செய்யப்படுகிறது.
ஆக மொத்தத்தில், 15 முதல் 20 சதவீத பயிர் விளைச்சல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, பசுந்தாள் உரங்களைத் தொடர்ந்து பயன்படுத்தி, விளைநிலம் மற்றும் சுற்றுச்சூழலை மாசுபடுவதிலிருந்து பாதுகாத்து, அடுத்த தலைமுறையினருக்கு சிறந்ததோர் உலகத்தை கொடுப்பது நமது கடமையாகும்.
பசுந்தாள் உரம் இடும் முறைகள்:
பசுந்தாள்களை நடவுக்கு இரு வாரங்களுக்கு முன் இடவேண்டும்.
பசுந்தாள் பயிரை பூ பூக்க தொடங்கிய உடனேயே மடக்கி வயலை உழ வேண்டும்
புதியது பழையவை